Saturday, June 29, 2013

செல்ல மகள் பள்ளி செல்ல - II

செல்ல மகள் பள்ளி செல்ல I part படிக்க

முதல் நாள் நான் உடன்  இருந்ததால் அமைதியாக இருந்த சிவாஞ்சலி, ரெண்டாவது நாள் அவள் வகுப்பை நெருங்கியதும் காலை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும்  அழுகை கச்சேரியை நடத்தி கொண்டிருந்தன. கிளாஸ் மிஸ், ஏறக்குறைய எல்லா குழந்தைகளையும் பெற்றோர்களிடம் இருந்து புடுங்கி வகுப்புக்குள் அனுப்பி கொண்டிருந்தார். தப்பி ஓடப்பார்த்த சிறுவனை உள்ளே தள்ளி வகுப்பு கதவு அடைக்கப்பட்டது. சில அம்மாக்கள் போக மனம் இல்லாமல் வகுப்பின் ஜன்னலுக்கு அருகில் நின்று எட்டி எட்டி பார்த்துகொண்டிருந்தனர். மிஸ் மறுபடியும் வெளியே வந்து எல்லாரையும் விரட்ட ஆரம்பித்தார். எல்லாரும் வீட்டுக்கு போங்க, எல்லாம் ரெண்டு நாள்ல சரியாகிடும், நீங்க இப்படி எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தா உங்களை பார்த்துட்டு இன்னும் அழுவாங்க என்று சொல்லியும் தயங்கி தயங்கி வெளியே சென்றனர்.

மதியம் வீட்டுக்கு வந்த சிவாஞ்சலியிடம், கிளாஸ்ல என்னமா பண்ணுனீங்க?
நான் அழுனனா, எல்லாரும் அழுனான்களா மிஸ் வந்து எல்லாருக்கும் காஃபி ஊத்துன சாக்லேட் (coffee bite) கொடுத்தாங்க.அப்புறம் சோட்டா பீம் கார்டூன் போட்டு காமிச்சாங்க அப்பா,அவ்ளோதான்.

அடுத்த ரெண்டு நாட்கள் கொஞ்சம் சிணுங்கி அதற்கு அடுத்த நாளில் இருந்து ஜாலியாக போக ஆரம்பித்தாள். இன்னிக்கு ஜானி ஜானி எஸ் பாப்பா சொல்லி கொடுத்தாங்க. அவள் கீ போர்டை தூக்கி வந்து அப்பா, இதுல மியூசிக் காலியாகிடுச்சு (அர்த்தம் : பேட்டரி போயிடிச்சு, மாத்தனும்) வேற வாங்கி கொடுங்க. நீதான் சமத்தா ஸ்கூலுக்கு போற இல்லை வேற வாங்கி தர்றேன். ரெண்டு கையையும் அகல விரித்து, இவ்ளோ மியூசிக் வாங்கி குடுங்கப்பா என்று சிரித்தாள்.

காலையில் அசந்து தூங்கும் குழந்தையை எழுப்பி கிளப்புவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும்.வீட்டு வாசல்ல ஒரு யானை குட்டி வந்து நின்னு உன் பேரை சொல்லி கூப்பிடுது சிவாஞ்சலி.படுக்கையில் இருந்து இறங்கி வாசலுக்கு ஓடினாள். எங்கப்பா? இவ்வளவு நேரம் நின்னுச்சா, நீ வரலைனதும் அது ஜுக்கு போயிடுச்சு.

பிங்க்கி உனக்கு முன்னாடியே எந்திருச்சு குளிக்கப்போகுது,சிவாஞ்சலி. பிங்க்கி, ப்ரௌனி, ட்வீட்டி, ஃ பிராக்கி எல்லாம் அவளின் பஞ்சு பொம்மைகள்.நீ பிங்க்கியை குளிப்பாட்டு, நான் உன்னை குளிப்பாட்டி விடறேன் சரியா?? அவள் குளித்துக்கொண்டே பிங்க்கியை முங்காச்சு போடேறேன்னு சொல்லி வாளி தண்ணிக்குள் முக்கி எடுத்தாள்.பள்ளிக்கு கிளம்பி வெளியே வந்து, இருங்க வர்றேன்னு என்று  சொல்லி வீட்டுக்குள் ஓடினாள். பொம்மைகள் இருக்கும் இடத்துக்கு அருகில் சென்று, நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றேன் என்று கூறியவள் அவள் ஆச்சியிடம், பிங்க்கிய பத்திரமா பார்த்துக்குங்க என்றாள்.வாளிக்குள் இருந்து எட்டி பார்த்து வழி அனுப்பி வைத்தது பிங்க்கி.

மாலை நான் வேலை முடித்து வீட்டுக்கு செல்லும்போது பிங்க்கியையும் ப்ரௌனியையும் மடியில் வைத்து கொண்டு chubby cheeks chubby cheeks என்று பாடி கொண்டிருந்தாள்.முகம் கொள்ளா சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தது பிங்க்கி.


Thursday, June 27, 2013

செல்ல மகள் பள்ளி செல்ல...

என் மகள் சிவாஞ்சலி இன்று முதல் முறையாக பள்ளிக்கு சென்றாள். இது வரை ப்ளே ஸ்கூலுக்கு எதுவும் அனுப்பியதில்லை. பள்ளியில் எப்படி இருப்பாளோ என்று பயந்து கொண்டிருந்தோம்.பள்ளி செல்ல அவளுக்கு பேக், ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது அப்பா எனக்கு மொபைல் போன் வேணும் என்று கேட்டு அதிர வைத்தாள். ஸ்கூலுக்கு போனா உங்ககிட்ட எப்படி பேசுவேன், எனக்கு ஃபோன் வேணும் என்றாள். இப்பதான் எல்கேஜி போறா, இன்னும் இவ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சு மத்த குழந்தைகள் கிட்ட பழகி அதுக பழக்கவழக்கங்களை கத்துக்கிட்டு இன்னும் என்னனென்ன கேக்க போறாளோ என்று நினைக்கும்போதே குதூகலமாக இருக்கிறது.

புத்தகப்பை, சாப்பாட்டு பை,டிஃபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் எல்லாம் பிங்க் கலர். (மேட்சிங் மேட்சிங் தான் வேணும்). அதே சமயம் நான் பள்ளிக்கு செல்லும் போது RMKV துணிக்கடையில் கொடுத்த மஞ்சள் பையில் டிஃபன் பாக்ஸை எடுத்து சென்றது ஞாபகம் வந்தது.

இன்னும் சிவாஞ்சலிக்கு யூனிபாஃர்ம் வராததால் அவளுக்கு என்ன டிரஸ் போடலாம் என்று மனைவி கேட்டபொழுது, BORN TO BE FAMOUS BUT FORCED TO GO TO SCHOOL என்று பெரிதாக வாசகம் பொறித்த டி சர்ட் ஒன்று என் பெண்ணிடம் உண்டு, அதை போட்டு விடு என்றேன். அதெல்லாம் முடியாது நான் வேற ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன் என்று பார்த்த பார்வை உங்க கிறுக்குத்தனத்தை எல்லாம் இதுல காட்டாதிங்க என்பது போல இருந்தது.

இன்று,வழக்கமாக பத்து மணி வரை தூங்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக எழுப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. அவள் கிளம்பிய பிறகு, அவளை சுத்தி உட்கார்ந்து என்னுடைய அம்மா, என் மனைவியின் அம்மா, மனைவியின் தம்பி எல்லாரும் அள்ளி அள்ளி வீசிய அறிவுரைகளை (உதா : பிஸ் வந்தா உடனே மிஸ் கிட்ட சொல்லிடனும்,ஒழுங்கா படிக்கணும், யாரு வந்து கூப்பிட்டாலும் போயிட கூடாது.யாரு எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது ..etc....)கேட்டு மிரள மிரள விழித்தபடி என்னுடன் வந்தாள்.

மிருகங்கள், பழங்கள், கதை, தமிழ் ஆங்கில எழுத்துக்கள் வரையப்பட்ட வண்ணமயமான வகுப்பறை. இன்று ஒரு நாள் மட்டும் பெற்றோர்களை வகுப்பறையில் அனுமதித்தனர்.ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு.ஒரு மணி நேரமும் அவளது குட்டி நாற்காலிக்கு பக்கத்தில் நானும் அமர்ந்திருந்தேன். வித விதமான குழந்தைகள். பக்கத்து இருக்கை குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று கேக்க அது அழகாக வெட்கப்பட்டுக்கொண்டு அம்மா மடியில் முகம் புதைத்து கொண்டது. ஒரு சிறுவன் கண்ணீரும் தூக்கமுமாயிருந்தான். அவன் அம்மா அவனை பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து குளிப்பாட்டி  இழுத்து வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னொரு வாலு, நின்றுகொண்டு உட்கார வைத்திருந்த சிறிய நாற்காலியை தலையில் கவுத்தி வைத்து கொண்டு நின்றது. அவன் அம்மா சேட்டை பண்ணாம பேசாம உட்காரு என்று அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தார்.

பத்து நிமிடம்  கூட இல்லை அதற்குள் சிவாஞ்சலி வீட்டுக்கு போகலாம் என்று அனத்த ஆரம்பித்தாள். இந்த மாதம் மட்டும் அரை நாள்தான் பள்ளி. திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்லும்பொழுது, மைதானத்தில் இருந்த ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டினம் எல்லாவற்றையும் காட்டி கூட்டி வந்தேன். ஹையா, இனிமே பார்க்குக்கு போகவேண்டாம் நான் தினம் ஸ்கூலுக்கு வந்து ஊஞ்சல், சறுக்கு மரம் விளையாடுவேன் என்று குதித்து கொண்டே வந்தாள்.

எனக்கு இன்று, வாழ்க்கை இன்னும் அழகாகிவிட்டது போல் தோன்றியது. ஏனோ காலையில் இருந்து மனம் சந்தோசமாயிருக்கிறது.