Thursday, May 5, 2011

கிருஷ்ணப்பருந்து





இந்த வருட புத்தக கண்காட்சியின் போது, அருகில் இருந்த பதிவரிடம் ரெம்ப நாளா ஒரு புத்தகத்த தேடிட்டு இருக்கேன், கிடைக்கவேயில்லை என்றேன். வருடா வருடம் தன் எடைக்கு சமமாக புத்தகமா வாங்கி இலக்கியத்தை சாறு பிழிந்து குடிக்கும் பதிவர்(?!) அவர். பேர சொல்லுங்க, இப்பவே தேடி வாங்கிடலாம் என்றார். "கிருஷ்ணப்பருந்து" என்றேன். அட, இதையா தேடிட்டு இருக்கீங்க வாங்க நான் வாங்கி தரேன் தரமான பதிப்பும் இருக்கு, மலிவு விலை பதிப்பும் இருக்கு எது வேணும் உங்களுக்கு என்று எடுத்து காட்டியது ஆ. மாதவன் எழுதிய கிருஷ்ணப்பருந்து புத்தகத்தை. நான் தேடின புத்தகம் இது இல்லை, இந்த மாதிரி புத்தகத்த படிக்க கொடுத்து, பயபுள்ளைங்க என்னையும் இலக்கியவாதியா மாத்த பாக்கிறாங்க, அவங்க எண்ணம் நிறைவேற விடக்கூடாது என்று எண்ணியபடி அப்புறம் வாங்கிக்கிறேன் என்றபடி புத்தகத்தை கீழே வைத்தேன்.

நான் தேடியதும் கிருஷ்ணப்பருந்து புத்தகம்தான். நான் பள்ளியில்  படிக்கும்பொழுது  சாவி வார இதழில்  அரஸ் ஓவியத்துடன் தொடராக வந்த கதை அது. வீட்டில் வாராவாரம் கதையை பிரித்து தனியாக பைண்ட் செய்து வைத்திருந்தார்கள்.அந்த கதையின் மூலம் மலையாளம். போன வாரம் லேண்ட்மார்க்கில் வேறு ஏதோ புத்தகத்தை தேடும் பொழுது நான் தேடிக்கொண்டிருந்த கிருஷ்ணப்பருந்து  கையில் சிக்கியது. மலையாளத்தில் இந்த புத்தக்கத்தை எழுதியவர் பி.வாசுதேவன் தம்பி. தமிழில் இதை மொழிப்பெயர்த்த்வர் சிவன்.
மலையாள மாந்த்ரீகர்களை பற்றிய கதை இது. கிருஷ்ண பருந்தை ஆராதனா மூர்த்தியாக பரம்பரை பரம்பரையாக வழிபடும் ஒரு குடும்பம். அதில் உள்ள மாந்த்ரீகன், கிருஷ்ண பருந்தை வழிபட்டு அதன்  மூலம் கிடைக்கும் மந்திர சித்தியை கொண்டு ஊருக்கு உதவுபவன். அவனை அழிக்க நினைக்கும் துர்மந்திர மாந்த்ரீகன் "பட்டேத்திரி". கிருஷ்ணபருந்தை வழிபடும் மாந்த்ரீகன் தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய முக்கிய அனுஷ்டானம் "பிரம்மச்சர்யம்". அந்த பரம்பரையில் வந்த மாந்த்ரீகன் தனக்கு மரணம் வருவதை அறிந்தவுடன், தனது மருமகனுக்கு மந்திர உபதேசம் செய்து வைத்துவிட வேண்டும். மருமக்கள் தாயம்.

கிருஷ்ண பருந்து அந்த கொட்டாரத்தின் மீது பறக்க, மாந்த்ரீகனாக இருக்கும் பப்பு மாமா தனது மரணம் நெருங்கிவிட்டதை உணர்வதாய் ஆரம்பிக்கிறது கதை. அன்றைய இரவு முடிவதற்குள் அவர் அடுத்த தலைமுறை மாந்த்ரீகனை உருவாக்கிவிடவேண்டும். அதற்கு அவர் தேர்வு செய்வது அவர் மருமகன் குமாரன் தம்பியை. அதை கண்டு அச்சப்படுகிறார் பப்பு மாமாவின் தங்கையும் குமாரன் தம்பியின் அம்மாவான குஞ்சிகுட்டி. ஏனெனில், குமாரன் தம்பிக்கு கஞ்சா புகைப்பது, பெண்களுடன் சகவாசம் என்று அத்தனை கெட்ட பழக்கங்களும் உண்டு. அவன் மாந்த்ரீகன் ஆனால் அவனால் பிரமச்சாரியாக இருக்க முடியாதே, அதனால் கிருஷ்ண பருந்தின் சாபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற கவலை அவன் அம்மாவிற்கு. ஆனால் குமாரன் தம்பிக்கு மந்திர உபதேசம் செய்வதில் அவன் மாமா பப்பு உறுதியாக இருக்கிறார். அதைப்போலவே செய்துவிட்டு உயிரை விடுகிறார். 

மாந்த்ரீகன் ஆன குமாரன் தம்பி பிரம்ச்சர்யத்தை தீவிரமாக கடைப்பிடிக்கிறான். அனுமனின் தீவிர உபாசகன் ஆகிறான். நிறைய மந்திர சித்திகளை பெறுகிறான். இவனை அழிக்க துர்மந்திரத்தை பிரயோகிக்கும் பட்டேத்திரி ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவுகிறான்.
புகழ் பெற்ற மாந்த்ரீகன் ஆகும் குமாரன்தம்பிக்குள் அடக்கி வைக்கப்படிருந்த காமம் ஒருநாள் விழித்தெழுகிறது. பழைய பெண் தொடர்புகளை புதுப்பிக்கும் குமாரன்தம்பி மந்திர சித்திகளை இழக்க ஆரம்பிக்கிறான். சமயம் பார்த்து காத்து கொண்டிருந்த பட்டேத்திரி அந்த பரம்பரையே அழிக்க அழிவு வேலைகளை ஆரம்பிக்கிறான். மீதி படிச்சு தெரிஞ்சுக்குங்க..

இதை வெறுமனே மாந்த்ரீக நாவல் என்று ஒதுக்கிவிடமுடியாது. நம்மூரில்,இப்பொழுதும்  மலையாள பணிக்கரை கூப்பிட்டு பிரசன்னம் பார்கிறார்கள். இந்த கதை, அந்த காலகட்டத்தில் ஒரு மாந்த்ரீக பரம்பரையின் வாழ்க்கை முறையை  முழுதாக விவரிக்கும் நூல். படிச்சு பாருங்க.

இந்த கதை பின்பு மோகன்லால் நடிக்க ஸ்ரீ கிருஷ்ண பருந்து என்ற பெயரில் 1984 லாம்  வருடம் வெளியானது. 


புத்தகம் வாங்க :
http://www.noolulagam.com/product/?pid=3657 

Karpakam puthakaalayam,
4/2, Sundaram street, Near nadesan park,
T,nagar, Chennai -17.
Phone : 2431 4347.
Email : info@karpagamputhakalayam.com

Price : Rs.190/




Thursday, January 13, 2011

நிலையாமை..

ஜனவரி ஒன்று 2011. மாலை நேரம். அந்த நண்பரிடமிருந்து போன்.
என்ன காலைல இருந்து நீங்க போன் பண்ணி வாழ்த்து சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன், என்ன காலே பண்ணலை.

எங்கங்க, நீங்க புத்தாண்டுக்கு சிங்கப்பூர் போறதா சொன்னீங்க, இன்னும் சென்னைல என்ன பண்றீங்க, சிங்கப்பூர் போகலையா?நீங்க சிங்கப்பூர் போய்டதால நினைச்சேன். இன்னும் போகலியா?

ஹலோ நான் இன்னிக்குதான் போறேன்னு சொன்னேன். கால் பண்ண மறந்துட்டேன்னு சொல்லுங்க, எதையாவது சொல்லி சமாளிக்காதிங்க, நான் இப்ப ஏர்போர்ட்ல தான் இருக்கேன். ரிடர்ன் பத்தாம் தேதிதான் வருவேன். போன தடவை போகும்போதே உங்க பொண்ணுக்கு எதுவும் வாங்கிட்டு வரலை. இந்த தடவை ஏதாவது வாங்கி வரேன். Official tour வேலை எப்படி இருக்குனு தெரியலை, பார்கலாம். அப்புறம் இன்னும் நீங்க புத்தாண்டு வாழ்த்து சொல்லலை.

Oh.sorry. Happy new year & wish you a happy journey.

சரி நான் பத்தாம் தேதி உங்கள வந்து பாக்கிறேன்.Bye.

நல்ல நண்பர்.வருடங்களாக நல்ல பழக்கம். ஒரு யோகா வகுப்பில் அறிமுகமானவர். பீகாரில் மூன்று வருடம் யோகம் சார்ந்த பயிற்சிகள் பற்றி படிக்கும்போது, ஒவ்வொரு வருடமும் சேர்ந்தார்ப்போல் பதினைந்து நாட்கள் அங்கே தங்க வேண்டும். பெரும்பாலும் ஒரே அறை கிடைத்துவிடும். பயிற்சியின்போது ஒவ்வொருவர் சொல்லும் அனுபவங்களை வகுப்பில் கேட்டுவிட்டு, அறையில் எல்லோரையும் ரசிக்கும்படி கிண்டல் அடிப்பார். தியானத்தின் போது உள்ளே ஒளி தெரிகிறது என்று சொன்ன சக நண்பருக்கு இவர் வைத்த பெயர் உள்ளொளி சித்தர்.

ஜனவரி 5. ஏதோவொரு மொபைலில் இருந்து இவர் பெயரை குறிப்பிட்டு expired என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த நம்பருக்கு கால் பண்ணியதில், நண்பரின் அப்பாதான்.

ஆமாப்பா, நேத்து போய் சேர்ந்துட்டான். சிங்கப்பூர் ஹோடேல்ல ராத்திரி நீச்சல் கொளத்துல போய் குளிச்சிருக்கான், இவனுக்கு நீச்சல் தெரியாது. அந்த நேரத்துல ஏன் குளிக்கபோனான்னு தெரியலை. தண்ணில முங்கி போய்ட்டான். முப்பத்தி ரெண்டு வயசுதான் ஆகுது, போய்ட்டான்.

பாடி எப்ப வருது?

நாளைக்கு ஏர் இந்திய ப்ளேன்ல வருது. கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் எல்லாம் முடிஞ்சு வர ராத்திரி ரெண்டு மணி ஆகிடும்.போஸ்ட் மார்டம் பண்ண உடம்பு வேற,அடுத்த நாள் காலைலயே இறுதி காரியம் எல்லாம் பண்ணிடலாம்னு இருக்கோம்.

கண்ணமாபேட்டை சுடுகாடு. பரந்து விரிந்து இருந்தது. ஏற்கனவே ஒரு உடம்பு எரிந்து கொண்டிருந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. உள்ளொளி சித்தர் மட்டும் லேசாக அழுது கொண்டிருந்தார். அங்கு இருந்த கூடத்தில் இருந்து வெளியே வந்தேன். சிறிது கூட இடைவெளி இன்றி ஏகப்பட்ட சமாதிகள். அவரவர் வசதிக்கு ஏற்ப கட்டப்பட்ட சமாதி. வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்தார்களோ, இங்கு நல்ல மர நிழல் சூழ இருந்தார்கள். தொழிலதிபர் இங்கே உறங்குகிறார், தனியாக அறை போல கட்டப்பட்ட சமாதி, கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அரசியல்வாதியின் சமாதி, மண்ணோடு மண்ணாக இணைந்து போய் இருந்த சமாதி, சமாதிகளின் கூடத்திற்கு இடையில் எளிமைக்கு உதாரணமாக சொல்லப்படும் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் சமாதியும் உண்டு. அனைத்தும் நிலையாமையை சொல்லி செல்கிறது.
அனைத்தும் முடித்து வீட்டிற்க்கு சென்று குளித்து முடித்து அமர்ந்த பொழுது, அவ்வளவு தானங்க வாழ்க்கை என்றாள் எங்கோ வெறித்தபடி.
அன்று அவளுடனான கூடலுக்கு மரணம் பற்றிய பயமே பிரதானமாயிருந்தது.



Wednesday, January 5, 2011

கேபிள் சங்கரின் புதிய புத்தக வெளியீடு --படங்கள்


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய "சுரேகா"

வரவேற்புரை ஓ.ஆர்.பி. ராஜா

சிறப்பு விருந்தனர்கள் திரு.மோகன்பாலு, இயக்குனர் சீனு ராமசாமி, திருமதி.பர்வீன் சுல்தானா.

புத்தக வெளியீடு

கதையை உணர்ச்சிப்பூர்வமாக விமர்சித்து பேசிய திரு.மோகன் பாலு.
இந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, படித்துவிட்டு சங்கருக்கு கடிதம் எழுதுவேன் என்று பேசிய இயக்குனர் சீனு ராமசாமி.
வாழ்த்திப்பேசிய பேராசிரியை.

புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரை செய்த அண்ணாச்சி ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் அண்ணன் அப்துல்லா, லக்கி லுக் யுவக்ருஷ்ணா.



நன்றியுரை எழுத்தாளர் கேபிள் சங்கர்.

மற்றும் அரங்கை நிறைத்த பதிவர்கள்