Monday, July 5, 2010

சாவின் சாட்சி




எனக்கு நினைவு தெரிஞ்சு முதல் முதலா சாவ பத்தி தெரிஞ்சுகிட்டது அம்மா தாத்தா இறந்தபோதான். அப்பெல்லாம் அப்பா வச்சிருந்த கடைலதான் போன் இருந்துச்சு. ஒரு நாள் அப்பா சீக்கிரமே கடைய பூட்டிட்டு வந்துடாக. கொஞ்ச நேரத்துல அம்மா அழ ஆரம்பிச்சுடாக. அப்பா ஆச்சிதான் அய்யா, இப்பதான் அப்பா கடைக்கு போன் வந்துதான் ஊருல உங்க தாத்தா இறந்து போய்ட்டாராம், நாம போய்ட்டு வந்த்ருவமா, என்று கேட்டார். பயந்து போன தம்பி வரமாட்டேன் என்று கூறிவிட அவனை பக்கத்துக்கு வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி சென்றோம். கூடத்தில் நிறைய மாலையிட்டு தாத்தாவை படுக்க வைத்திருந்தார்கள். தாத்தாவின் மூக்கில் பஞ்சை வைத்து, கண்களை மூடி சந்தனம் வைத்திருந்தார்கள். அழுது வீங்கிய கண்களுடன் ஆச்சியும் தாத்தா அருகில் அமர்ந்திருந்தார். அப்பா தாத்தாதான் முன்னாடி நின்னு எல்ல காரியத்தையும் பண்ணி கொண்டிருந்தார். நீர் மாலைக்கு நேரமாச்சு எல்லாரும் கிளம்புங்க, என்றார். என் கையிலும் ஒரு சிறிய குடத்தை குடுத்து அனுப்பினார்கள். அருகில் இருந்த ஆற்றில் குளித்துவிட்டு குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தோம்.தாத்தாவை  குளிப்பாட்டனும், முதல்ல பேரன் பேத்திங்க எல்லாம் தண்ணி ஊத்துங்க என்றதும் குடத்தை எடுத்து முன் சென்றேன் . கூட்டத்தில் யாரோ, சின்ன பேரனை கூட்டிட்டு வரலையா என்று கேட்டார்கள். அதற்கு அப்பா ஆச்சி, அவன் பயந்துட்டான், இவன்தான் கொஞ்சம் தைரியமா வந்தான் .தண்ணீர் ஊற்றியதும் தாத்தாவின் கண்களில் அப்பிய சந்தனம் கரைந்து கண்கள் திறந்தது. திடுக்கிட்டு  பயந்து  அலறி, அழுது கொண்டிருந்த அம்மாவின் சேலைக்குள் முகத்தை புதைத்து கொண்டேன். பயபடாதையா ஒண்ணும் இல்ல,ஆச்சி ஓடிவந்து முதுகு தடவி குடுத்தாள். நீண்ட நாட்களுக்கு சந்தனம் விலகிய கண்கள் தூக்கத்தில் பயமுறுத்தியது.
 
அடுத்து கல்லூரி படிக்கும்போது நடந்த நண்பனின் சாவு.அவனை பார்க்கும்பொழுது, புது ஜீன்சும் புது டி ஷர்டுமாக இருந்தான். என்னடா என்று கேட்டதற்கு, இல்ல மக்கா இந்த கலர்ல டிரஸ் போட்டா நல்லாருக்கும்னு என் ஆளு சொன்னாடா, அதான் புதுசு எடுத்தேன். இப்ப அவ கிட்ட காமிக்கணும். நான் போய் அவ காலேஜ்கிட்ட நிக்க போறேன், அவ என்ன பார்த்து என்ன சொல்றான்னு கேக்கணும்  என்று பைக்கை எடுத்து கிளம்பினான். சிறிது நேரத்தில் அந்த செய்தி வந்தது. போய் பார்த்ததில் அவன் பைகிர்கோ அவன் போட்டிருந்த உடையிலோ ஒரு சிறு கீறல் கூட இல்லை, அப்படியே புதுசு போலிருக்க தலை மட்டும்  லாரி ஏறி நசுங்கி இருந்தது. அவன் கொஞ்சம் குடித்திருப்பான் போலிருந்தது.  நானும் குடியை விட தீர்மானித்தேன். நாள் சென்று துக்கத்தின் வீர்யம் குறைய புத்தனாயிருந்த மனது மறுபடியும் பொறுக்கி ஆனது.
 
நல்ல காரியத்திற்கு போறமோ இல்லையோ கண்டிப்பா துக்க காரியத்திற்கு போகணும்னு அப்பா தாத்தா அடிக்கடி சொல்லுவாக. சொல்றதோட மட்டும் இல்லாம சொந்தகாரங்கள்ள யாரு செத்து போனதா சேதி வந்தாலும் போய் எல்லா காரியங்களையும் முன்ன நின்னு செய்வாக. சொந்தகாரங்களுக்கு சேதி சொல்றதிலே இருந்து, பாடை கட்றதுக்கு ஓலை வெட்டி போடறது, நீர் மாலை எடுக்கிறது, நெய் பந்தம் பிடிக்கிறது வரைக்கும் எல்லாம் கட்டா செய்வாக. கடைசியா காரியம் எல்லாம் முடிஞ்சு ஊர் வண்ணாத்திக்கும், நாவிதனுக்கும் காசு போய் சேந்துதான்னு பாத்துட்டுதான் வீட்டுக்கு வருவாக. இப்படி இருந்த தாத்தாவும் ஒரு நாள் போய்டாக. ஊர்லையே முதமுறையா அவுகள ஏசி பெட்டிக்குள்ள வச்சிருந்தோம். தாத்தாவின் தலைமாட்டில் ஏற்றி வைத்திருந்த ஊதுபத்தி மல்லிகையின் மணத்தை பரப்பி கொண்டிருந்தது.  அந்த வயதிற்குள் நிறைய சாவை பார்த்தால் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். வீட்டு வாசல் வரை ஒழுங்காக வரும் பெண்கள், வீட்டிற்குள் நுழைந்ததும் தலையை விரித்து போட்டு, அய்யா ராசா போய்டியா என்று அழுதபடி ஓடினார்கள். அதில் ஒருத்தி அழுவதை நிறுத்தி விட்டு, சமையல் அறைக்கு போய் காபி குடித்துவிட்டு வந்து மறுபடியும் அழுகையை தொடர்ந்தார். முதுகு வலிகுதுன்னாக, தைலம் தேச்சு விட்டேன், தேய்க்கும் போதே படக்குன்னு நெஞ்ச புடிச்சிட்டு என் மடியிலையே விழுந்துடாக,அவுகளை இனி எப்ப பாப்பேன்,ஆச்சி அரற்றியபடி இருந்தாள்.
 
எல்லாம் முடிந்து விசேசம் வைப்பதை பற்றி பேச்சு வந்தது. பதினாறாம் நாள் என்று முடிவானது. ஐயயோ, அவ்வளவு நாள் இங்க இருக்க முடியாது ஏற்கனவே மூணு நாள் லீவு போட்டுட்டேன், வேணும்னா மூணாவது நாள் விசேசத்த வச்சுக்குங்க, எல்லாரும் வேலைக்கு போகனுமில்ல என்றேன். அதுக்கு ஆச்சி, அய்யா அவர நல்லபடியாய் அனுப்பி வச்சுடீங்க, அப்படியே அவரு விசேசதையும் நல்ல படியா முடிச்சு குடுத்திருங்க, வேணுமினா நான் போய் சேர்ற நாளு ஞாயித்துகிழமையா இருக்கணும்னு குல சாமிய வேண்டிகிடறேன் என்றாள்.
 
பின்பு ஒரு நாள் ஒரு கல்யாண வீட்டில், மணமேடையில் ஏற்றி இருந்த மல்லிகைப்பூ மண ஊதுபத்தி, தாத்தாவின் சாவை ஞாபகப்படுத்தியது. எதிரில் உட்கார்ந்திருந்த மணப்பெண்ணை வெறித்து பார்த்து கொண்டிருந்த மாப்பிள்ளை, தாத்தாவின்  வெறித்த கண்களை நினைவூட்டினான்.
 
இன்று, உள்ளே கூட்டம் அதிகமாக இருந்ததால் புழுக்கம் அதிகமாக இருந்தது. காற்றோட்டமாக இருக்க வீட்டிற்கு வெளியே வந்தேன். இன்னும் பிணத்தை எடுக்க எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை. வெளி ஊரில் இருந்து பையன் வரவேண்டும். பாடை கட்டி கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். நல்ல பூ வேலைப்பாடு. சர சரவென்று பின்னி கொண்டிருந்தார்கள். சங்கு ஊதுகிறவன் இடை இடையே சங்கை ஊதிகொண்டிருந்தான். மழை  வரும் போலிருந்தது. வாசலில் அந்த கார் வந்து நின்று ஒருவன் இறங்கி உள்ளே ஓடினான். வேடிக்கை பார்க்க நானும்  வீட்டிற்குள் சென்றேன்.
காரில் இறங்கி வந்தவனை பார்த்தவுடன், பிணத்தின் அருகில் இருந்த என் மனைவி, ராசா உன் அப்பா நம்மளை எல்லாம் தவிக்க விட்டு போய்ட்டாருடா என்று என் உடம்பை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள்.


****